புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்படாமல் பெரும் குளறுபடிகள் நடந்துள்ளதாக, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அஇஅதிமுக மாவட்டச் செயலாளருமான பி.கே.வைரமுத்து பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், திருமயம் தொகுதியில் நிலவும் இந்தச் சூழல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடந்த 19-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது, மாவட்டம் முழுவதும் இறப்பு மற்றும் இடம்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் 1,39,587 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்தச் சூழலில், கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களின்போது பெறப்பட்ட தகவல்களை அதிகாரிகள் முறையாகப் பயன்படுத்தவில்லை என்பது அதிமுகவின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இது குறித்து விளக்கமளித்த பி.கே.வைரமுத்து, “திருமயம் தொகுதியில் மட்டும் 27,978 வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டாலும், நடைமுறையில் வரைவுப் பட்டியலில் இன்னும் ஆயிரக்கணக்கான இறந்தவர்களின் பெயர்கள் அப்படியே உள்ளன. குறிப்பாக, முகவரி மாறி வெளியூர்களுக்குச் சென்றவர்கள் மற்றும் ஒரே வாக்காளரின் பெயர் இரண்டு இடங்களில் இடம் பெற்றுள்ள ‘இரட்டைப் பதிவு’ (Double Entry) போன்ற குளறுபடிகள் களையப்படவில்லை. எஸ்.ஐ.ஆர் (SIR) எனப்படும் கள விசாரணைப் பணிகள் அத்தொகுதியில் கண்துடைப்பாகவே நடத்தப்பட்டுள்ளன” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அஇஅதிமுக சார்பில் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் (PLA 2), உயிரிழந்தவர்களின் உரிய இறப்புச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்தும், முகவரி மாற்றத் தகவல்களை அதிகாரிகளிடம் ஆதாரத்துடன் வழங்கியும், அந்தப் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக அவர் தெரிவித்தார். திருமயம் தொகுதியில் உள்ள சுமார் 300-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளிலும் இதே போன்ற அலட்சியப் போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதால், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மறுஆய்வு நடத்தி, குளறுபடிகள் இல்லாத தூய்மையான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என அவர் தனது கோரிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

















