மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணியில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்,
“என் வாழ்க்கையும், குடும்பமும் தமிழ். எனது குடும்பம் இங்கே இருக்கிறது. அதனால் தான் சிவராஜ்குமார் இங்கே வந்திருக்கிறார். அவர் பேசும் கன்னடம், தமிழ் மொழியில் இருந்து பிறந்த ஒன்று. அவர் நம் குடும்பத்தின் ஒரு அங்கம்” என உரையாற்றினார்.
இந்தக் கருத்து கர்நாடகாவிலுள்ள சிலர் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ‘தக் லைஃப்’ படத்தின் பேனர்கள் கர்நாடகாவில் கிழிக்கப்பட்டன. மேலும், கமல்ஹாசன் தனது அறிக்கைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
ஆனால், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த கமல்,
“அன்பு என்பது மன்னிப்பு கேட்க வேண்டிய ஒன்று அல்ல. தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டிருப்பேன். தவறு செய்யவில்லை என நினைக்கிறேன். எனவே மன்னிப்பு கேட்க மாட்டேன்” என்று தைரியமாக தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், “இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டம் மற்றும் நீதியை நம்புகிறேன். கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மீதான என் அன்பு பரிசுத்தமானது. சிலர் தனது சொந்த அரசியல் அஜெண்டாவுக்காக இதை தவறாக எடுத்துக்கொள்கிறார்கள்” என்றும் கமல் கூறினார்.