சென்னை: யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக வெளியான தகவலால் பலர் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், மத்திய நிதி அமைச்சகம் அதற்கான தெளிவான மறுப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில், ரூ.2,000-க்கு மேற்பட்ட ஒவ்வொரு யுபிஐ பரிவர்த்தனைக்கும் 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் எனும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. இது, நாடு முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் டிஜிட்டல் பேமென்ட் முறையான யுபிஐயை பெரிதும் பாதிக்கும் என்ற கவலைகளை எழுப்பியது.
மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
இந்த தகவலுக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சகம்,
“இது முற்றிலும் பொய்யான மற்றும் மக்கள் மத்தியில் தவறான புரிதலை உருவாக்கும் விதமானது. ரூ.2,000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வசூலிக்க அரசு பரிசீலித்து வருவதாக எந்தவித திட்டமும் இல்லை.” என தெளிவாக தெரிவித்துள்ளது.
யுபிஐ (Unified Payments Interface) இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துள்ள டிஜிட்டல் பரிவர்த்தனை முறையாக திகழ்கிறது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, வணிகர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் இம்முறையை விரும்பிக் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம், BHIM, அமேசான் பே போன்ற செயலிகள் மூலம் நாள்தோறும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் நிகழ்கின்றன.
பரிவர்த்தனைகளின் அளவைக் கணக்கிடும்போது, 2019-20 நிதியாண்டில் ரூ.21.3 லட்சம் கோடி ஆக இருந்தது. ஆனால் 2024 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், இது ரூ.260.56 லட்சம் கோடி என பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதிக அளவில் பணப் பரிவர்த்தனை நடைபெறும் யுபிஐ முறையில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்ற வதந்திகள் பயனாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் இந்த மறுப்பு மக்களிடம் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்டியுள்ளது.
பொதுமக்கள் கவனிக்க:
யுபிஐ பரிவர்த்தனைகளில் தற்போது எந்தவித ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படவில்லை. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராமல் வதந்திகளை நம்ப வேண்டாம்.