பொன்னேரி: திருவாயற்பாடி சௌந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், இன்று (ஏப்ரல் 19) காலை சிறப்பாக நடைபெற்றது.
ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கிய இந்த பிரம்மோற்சவ விழாவில், அன்றிலிருந்து பல்வேறு உற்சவ நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விழாவின் 7வது நாளான இன்று காலை 7:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
விசேஷ அலங்காரத்துடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராய் உற்சவ பெருமாள் கோவிலிலிருந்து புறப்பட்டு தேரடி தெருவில் உள்ள 43 அடி உயர மரத்தேரில் ஏறி வீதியுலா புறப்பட்டார். வண்ணமயமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் தரிசனம் அளிக்க, பக்தர்கள் பெருமளவில் திரண்டனர்.
தேரோட்டம் புதிய தேரடி தெரு, தாயுமான் தெரு, நீலியப்பாதுரை தெரு, தண்டபாணி தெரு, செங்குன்றம் சாலை, அரிஅரன் பஜார் வீதி உள்ளிட்ட மாடவீதிகள் வழியாக நடைபெற்றது. பக்தர்கள் “கோவிந்தா! கோவிந்தா!” எனக் கோஷம் எழுப்பி உற்சாகத்துடன் தேரை இழுத்து சென்றனர்.
வழிநடையில் தன்னார்வலர்கள் மற்றும் வியாபாரிகள் பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மோர் மற்றும் உணவுகளை வழங்கினர். மங்கள வாத்தியங்கள், செண்டைமேள ஒலிகளுடன் பக்தர்களின் பக்தி பரவசம் அழகாக காட்சியளித்தது. மாலை 5:00 மணிக்கு தேரோட்டம் முடிந்து தேரின் நிலைக்குத் திரும்பியது.
இந்த விழாவிற்காக பொன்னேரி காவல்துறையினர் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.