சென்னை: மத்திய அரசின் பெண் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் கீழ், 2024-25 நிதியாண்டில் மட்டும், சென்னை அஞ்சல் மண்டலத்தில் 74,332 புதிய சேமிப்புக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை நகர அஞ்சல் மண்டலத் தலைவர் ஜி. நடராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“2015-ம் ஆண்டு அறிமுகமான இந்த திட்டத்தின் மூலம், தற்போது வரை 10.44 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு, ரூ.9,234 கோடி வைப்புத் தொகையுடன் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன,” என கூறப்பட்டுள்ளது.
74 ஆயிரத்துக்கும் மேல் கணக்குகள் – ரூ.1,798 கோடி சேமிப்பு
2024-25 நிதியாண்டில் மட்டும், சென்னை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகள் அடங்கிய சென்னை அஞ்சல் மண்டலத்தில், 74,332 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மொத்தமாக ரூ.1,798 கோடி சேமிப்பு பெறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் பெறப்பட்ட ரூ.1,564 கோடியை விட 14.96% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய அம்சங்கள்:
- ஆண்டுக்கு 8.2% உயர்ந்த வட்டி வழங்கப்படுகிறது.
- வருமான வரி விலக்கு (80C பிரிவின் கீழ்) வழங்கப்படுகிறது.
- ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ₹250, அதிகபட்சம் ₹1.5 லட்சம் வரை வைக்கலாம்.
- 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கே இந்த கணக்கை தொடங்கலாம்.
- 21 ஆண்டுகளில் கணக்கு முதிர்ச்சியடையும்.
- 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதும் அல்லது 18 வயதுக்குப் பிறகு, மொத்த தொகையின் 50% வரை திரும்பப் பெற முடியும்.
மேலும் தகவலுக்கு…
இந்த திட்டம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு: www.indiapost.gov.in அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.