பிரபல மலையாள நடிகரும், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் புகழ்பெற்ற நடிகருமான ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது குடும்பம் கடுமையான சாலை விபத்தில் சிக்கியுள்ளனர். இந்த விபத்தில் அவரது தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷைன் டாம் சாக்கோ சமீபத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஒரு விவாதத்துக்குள்ளான நிலையில், உடல்நலக் குறைபாட்டால் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே, நேற்று (5.6.2025) இரவு 10 மணியளவில், தொடருபுழாவிலிருந்து தனது குடும்பத்துடன் பெங்களூரு நோக்கி காரில் பயணமாக சென்றுள்ளார்.
இன்று காலை சுமார் 6 மணியளவில், காரில் பயணித்தபோது எதிரே வந்த லாரி ஒன்று வேகமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்தது.
விபத்தில், காரில் இருந்தவர்களில் சிலர் கடுமையாக காயமடைந்தனர். காரின் பின்புறம் அமர்ந்திருந்த ஷைன் டாம் சாக்கோவின் தந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நடிகர் டாம் சாக்கோ மற்றும் அவரது சகோதரர் படுகாயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டாம் சாக்கோவுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.