புதுடெல்லி: 12ஆம் வகுப்பு வரை கலை மற்றும் காமர்ஸ் பிரிவுகளில் படித்த மாணவர்களுக்கும் விமானியாக மாறும் வாய்ப்பு விரைவில் ஏற்படக்கூடியதாக இருக்கிறது. இந்திய விமான போக்குவரத்து துறை, கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் (CPL) பெறுவதற்கான தகுதிகளில் முக்கியமான மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைகளின் படி, இந்தியாவில் CPL-க்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை கட்டாயமாக படித்திருக்க வேண்டும். இது 1990களில் இருந்து அமலில் உள்ள விதிமுறையாகும். ஆனால், இது ஒரு காலம் கடந்த, தேவையற்ற கட்டுப்பாடாக உள்ளது என விமான துறையினர் மற்றும் பயிற்சிபெறும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்த விவகாரம் குறித்து விமானி மற்றும் இண்டிகோவின் முன்னாள் துணைத் தலைவர் கேப்டன் சக்தி லம்பா கூறுகையில்,
“கணிதம் மற்றும் இயற்பியல் என்பது இடைநிலைப்பள்ளி பாடங்களில் உள்ள அடிப்படை விஷயங்களே. விமானியாகும் கனவை கலை, காமர்ஸ் மாணவர்களிடம் இருந்து இவ்விதிமுறைகள் தடுக்கின்றன. உலகளவில் பல்வேறு நாடுகளில் இத்தகைய கட்டாய பாடப்பிரிவுகள் இல்லாமலேயே பைலட் உரிமம் வழங்கப்படுகிறது.”
பிரைவேட் பைலட் லைசென்ஸ் (PPL) பெறுவதற்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், கமர்ஷியல் பைலட் உரிமத்திற்கே மட்டும் இந்த விதிமுறை ஏன்? என்பது பற்றியும் விமானி பயிற்சி நிறுவனங்கள் கேள்வி எழுப்புகின்றன.
இந்தியாவில் விமானிகள் குறைவாக உள்ள சூழலில், பைலட் கனவை கொண்ட மாணவர்களுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பது தற்போது விமான போக்குவரத்து துறையின் நோக்கமாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, விரைவில் புதிய அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய திட்டம் அமலுக்குவரும் பட்சத்தில்:
- 12ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவிலும் படித்திருந்தாலுமே, மாணவர்கள் பைலட் படிப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படலாம்.
இது பல மாணவர்களுக்கு வாய்ப்புகள் திறக்கும் மாற்றமாகவும், விமான துறையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகவும் அமையும் எனக் கருதப்படுகிறது.