சேலம் மாவட்டத்தின் ஆன்மீக அடையாளமாகத் திகழும் மேச்சேரியில் அமைந்துள்ள, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் மாசி மாதப் பெருந்திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் நேற்று மாலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் பக்திப் பரவசத்துடன் நடைபெற்றது. நடப்பு ஆண்டுக்கான திருவிழா கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி தேர் பொங்கல் மற்றும் சாமி புறப்பாட்டுடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து விநாயகர் பூஜை, ஆயக்கால் பூஜை உள்ளிட்ட ஆகம விதிப்படியான பல்வேறு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கொடியேற்றம் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது, அன்று முதல் மேச்சேரி நகரம் விழாக்கோலம் பூண்டது.
திருவிழாவின் தொடர்ச்சியாக மார்ச் 1-ஆம் தேதி மாலை, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் விநாயகர் மற்றும் அம்பாள் எழுந்தருளி ரதவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து, விழாவின் மகுடமாக மார்ச் 2-ஆம் தேதி மாலை 63 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பெரிய தேரில் அம்பாள் மற்றும் விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். அப்போது திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கிழக்கு ரதவீதி வழியாக அசைந்தாடி வந்த பெரிய தேர், கிராம சாவடியில் நிலைபெற்றது. வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் அம்மனுக்குத் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி மேச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன், பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைக் கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

















