கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்குட்பட்ட சின்னத்தடாகம் கிராமத்தில், தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நவீன பசுமைக்குடில் ஜெர்பரா மலர் சாகுபடியினை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ஆட்சியர், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் தோட்டக்கலைப் பயிர்களின் பரப்பை அதிகரித்தல், பழைய தோட்டங்களைப் புதுப்பித்தல் மற்றும் வாழைத்தார் பாதுகாப்பு உறை வழங்குதல் போன்ற பணிகளுக்கு 40 சதவீத மானியம் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், நீர் சேமிப்பு கட்டமைப்புகள், பசுமைக்குடில், நிழல்வலை கூடாரம், நிலப்போர்வை அமைத்தல், ஒருங்கிணைந்த உரம் மற்றும் பயிர் பாதுகாப்பு மேலாண்மை, வெங்காய சேமிப்புக் கிடங்கு மற்றும் தேனீ வளர்ப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
பசுமைக்குடில் சாகுபடியின் நன்மைகள் குறித்துப் பேசிய ஆட்சியர், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பயிர்களை வளர்ப்பதன் மூலம் வெளி நிலத்தை விட 3 முதல் 5 மடங்கு வரை கூடுதல் விளைச்சலைப் பெற முடியும் என்றார். காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்பதுடன், தரமான மற்றும் சீரான அளவு கொண்ட மலர் மற்றும் காய்கறி விளைபொருட்கள் கிடைப்பதால் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. குறிப்பாக, சொட்டுநீர் பாசனம் மூலம் 40 முதல் 50 சதவீதம் வரை நீர் மற்றும் உரத்தைச் சேமிக்க முடியும். கடந்த ஐந்து ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் ரூ.15.38 கோடி மதிப்பில் 9,105 பயனாளிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர். பசுமைக்குடில் அமைப்பதற்கு மட்டும் 32,000 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.1.53 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வின் ஒரு பகுதியாக, சின்னத்தடாகத்தைச் சேர்ந்த விவசாயி விஜயகுமார் என்பவர் 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.5.25 லட்சம் அரசு மானியத்துடன் அமைத்துள்ள ஜெர்பரா மலர் சாகுபடியை ஆட்சியர் பார்வையிட்டார். தற்போது செடிகள் செழித்து வளர்ந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் அறுவடை தொடங்க உள்ளதாக விவசாயி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உயர்மதிப்புள்ள ஜெர்பரா, குடைமிளகாய் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற பயிர்கள் ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் கொண்டவை என்பதால் விவசாயிகள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குநர் பாலசுப்ரமணியம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆனந்தகுமார் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

















