அரசு குளத்தில் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு
வேறு சர்வே எண்ணில் திடல் மண் அள்ளுவதாக புகார் – தடுக்க பொதுமக்கள் கோரிக்கை…
மயிலாடுதுறை அருகே திருக்கடையூர் கோயில் பகுதியில், அரசு குளத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, வேறு சர்வே எண்ணில் உள்ள அரசு திடலில் இருந்து மண் அள்ளி விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.
திருக்கடையூர் கோயில் அருகே சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் சர்வே எண் 238-ல் அரசு ஆனைகுளம் உள்ளது. இக்குளத்தில் வண்டல் மண் எடுக்க சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், கடந்த 3 தினங்களாக குளத்தை ஒட்டியுள்ள சர்வே எண் 237-ல் உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு திடலின் ஒரு பகுதியில் இருந்து விதிகளை மீறி 15 அடி அகலத்தில் 200 மீ தூரத்திற்கு 2பொக்லின் எந்திரங்கள் மூலம் திடல் மண் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, அரசு குளத்தில் மண் எடுக்க வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி, வேறு சர்வே எண்ணில் உள்ள அரசு திடலில் இருந்து மண் அள்ளுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

















