தொடர் மின்வெட்டால் முடங்கும் வடபெரும்பாக்கம் தொழிற்சாலைகள் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடபெரும்பாக்கம் தொழிற்பேட்டையில் தொடர்ச்சியான மின்வெட்டால் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உருவாகியுள்ளதாக தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடபெரும்பாக்கம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஸ்டீல், பிளாஸ்டிக், கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழகம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பகுதி முழுவதும் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு, சில நேரங்களில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மின்சாரம் இல்லாத நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை கூட மின்சாரம் துண்டிக்கப்படுவதால், தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்க முடியாமல் தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மின்வெட்டு காரணமாக இயந்திரங்கள் இயக்கப்படாமல், தொழிற்சாலைகளை முழுமையாக மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
தொழிற்சாலைகளை நடத்தி வரும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்குக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், சில தொழில் நிறுவன உரிமையாளர்கள் வங்கிகள் மூலம் கடன் பெற்று தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் நிலையில், தொடர்ந்து ஏற்படும் நஷ்டம் காரணமாக வங்கிக் கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் தொழிற்சாலைகளை முழுமையாக மூடும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த மின்வெட்டு பிரச்சினை குறித்து பலமுறை மின்சாரத் துறை அதிகாரிகளிடமும், சட்டமன்ற உறுப்பினரிடமும் முறையிட்டுள்ளதாகவும், உயர்மட்ட மின்துறை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமான புகார்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நேற்று மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை தொழிற்சாலை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, இனிமேல் மின்தடை இருக்காது என உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இன்று காலை 10 மணியளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மாலை 4 மணி ஆகியும் திரும்ப வராததால், பணிக்கு வந்த தொழிலாளர்களிடம் வேலை இல்லை என கூறி அவர்களை மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பியதாக தொழில் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தொழில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்ந்து பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும், இந்த நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் தொழிற்சாலைகளை மூட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“எத்தனை முறை மனு அளித்தாலும் அதிகாரிகள் அலட்சியமாகவே செயல்பட்டு வருகின்றனர். தொடர்ந்து ஏற்படும் மின்வெட்டால் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அரசு ஈடு செய்ய வேண்டும். இனிமேல் தடையின்றி மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
எத்தனை முறை மனு அளித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அரசு ஈடு செய்ய வேண்டும் என்றும், தொடர்ந்து தடையின்றி மின்சாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வடபெரும்பாக்கம் பகுதி தொழிலாளர்களும் தொழில் நிறுவன உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடபெரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் இருந்து பல கோடி ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்தப்படும் நிலையில், இந்தப் பகுதியை மின்சாரத் துறை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவதாகவும், இதனால் தங்களது தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில் நிறுவன உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர் மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதால், உடனடியாக மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
















