2025-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வழக்கமாக சிறப்பாக விளையாடும் அணிகள் சுமாராக விளையாடிவருகின்றனர், வழக்கமாக சுமாராக விளையாடும் அணிகள் சிறப்பாகவும் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
சென்னை அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தான் என்று ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜடேஜா , ஷிவம்துபே போன்ற நட்சத்திர ஆட்டக்காரர்கள் அடித்து ஆட முடியாமல் தடுமாறிவருகின்றனர். இந்நிலையில் CSK அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் தொடர் தோல்வி குறித்து பேசி உள்ளார்.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த நிலைமைக்கு தலைமை பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம் தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்து உள்ளார். ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் ஆகியோரை மெகா ஏலத்தில் விட்டுவிட்டீர்கள். ஏலத்தில் ஏராளமான இளம் வீரர்கள், திறமையான வீரர்கள் இருந்தனர், பிரியன்ஷ் போன்ற பல வீரர்கள் இருந்தனர். மேலும் சிஎஸ்கே-வின் கைகளில் நிறைய பணமும் இருந்தது ஆனால் சென்னை அணி அவர்களை வாங்க முயற்சிக்கவில்லை.
இதுவே சென்னை அணி தொடர்ந்து தோல்வி பெற காரணம். மற்ற அணிகள் அதிரடியாக விளையாடும்பொழுது சென்னை அணி தடுமாறி வருகிறது. இதற்கு அணி நிர்வாகமும் தலைமை பயிற்சியாளரும் தான் காரணம் என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.