சென்னை :
அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் பாலியல் வன்கொடுமை நடைபெற்ற வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஞானசேகரன் மீது 11 சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு வழங்கியபோது, “மாணவியின் விருப்பத்திற்கு மாறாக நடந்த ஞானசேகரனின் செயல்கள், சட்டவிரோதமானவையாகவும், மனிதநேயத்துக்கு எதிரானவையாகவும் உள்ளன” என்று தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட 11 பிரிவுகள் வருமாறு :
- விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடந்து கொள்ளல்
- மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து வைத்தல்
- வலுக்கட்டாயமாக கடத்தி, ஆசைக்கு இணங்க வைப்பதற்காக முயற்சி செய்தல்
- உடலில் காயம் ஏற்படுத்துதல்
- விருப்பத்திற்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல்
- மாணவியை கடுமையாக தாக்குதல்
- தனிநபர் அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல்
- கொலை மிரட்டல் விடுத்தல்
- பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்
- தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறல்
- தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் – பிரிவு 4
இந்த வழக்கில், அரசு தரப்பில் முன்னிலையாக இருந்த அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்த ஆவணங்கள், சாட்சிகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் அனைத்தும் குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்தன.
தீர்ப்பில், குற்றவாளி ஞானசேகரனுக்கு எவ்வாறு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.