திருவள்ளூர் அருகே மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க வந்த மின் வாரிய ஊழியர்களை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த சிட்டத்தூர் கிராமத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் கீழானுார் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக சிட்டத்தூர் கிராமத்திற்கு சென்று அங்கு உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அருகே மது அருந்திக்கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த சில நபர்கள் அங்கு வந்து மின்வாரிய ஊழியர்களை திடிரென கத்தியை காட்டி மிரட்டி சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் பழனி என்ற மின்வாரிய ஊழியரை பலமாக தாக்கி உள்ளனர். மேலும் இதனை விடியோ எடுத்த மின்வாரிய ஊழியரின் செல்ஃபோனையும் பிடுங்கி உடைத்ததோடு அவர்களை பணி செய்ய விடாமல் அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர் இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் மின் வாரிய ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து கீழானுார் அலுவலகத்திற்கு திரும்பி வந்துள்ளனர். இதில் பலமாக தாக்கப்பட்டதில் மின் வாரிய ஊழியர் பழனி என்பவருக்கு ஒரு பக்கம் காது கேட்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின்வாரிய ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டி தாக்கிய கந்தகுமார், மாரி மற்றும் வெங்கடேசன் ஆகிய மூன்று நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.














