கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்த மாணவனின் சக மாணவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது- தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் சம்பவம் குறித்து கல்வி முதன்மை அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே இரத்தினபரம் பகுதியைச் சேர்ந்த கவின் ஜெனிஸ் என்ற மாணவன் நாகர்கோயில் எஸ். எல். பி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு (11)படித்து வந்தார். இவர் தன்னுடன் படிக்கும் மாணவியுடன் பேசியது தொடர்பாக எழுந்த பிரச்சனையை தொடர்ந்து கவின் ஜெனிஷ் பெற்றோரை ஆசிரியர்கள் வரவழைத்துள்ளனர். மாணவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கவின் ஜெனிஸ் வீட்டிற்கு சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் தொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பெற்றோர் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கு இடையே கவின் இடம் பயிலும் மாணவர்கள் எஸ். எல். பி பள்ளி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவத்தை அறிந்து விரைந்து சென்ற போலீசார் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கவின் மரணம் தொடர்பாக உடனடி விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கல்வி முதன்மை அலுவலர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















