வீடுகள் இடிக்கப்பட்டதாக புகார் – காவல்துறை மீது நடவடிக்கை கோரி டிஐஜி அலுவலகத்தில் மனு
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஹபீப் சாயபு வீதியைச் சேர்ந்த வாசிதா, ஜாகிர் உசேன், பாத்திமா, சவுக்கத் அலி, ஜம்ரூத் உள்ளிட்டோர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் மின் கட்டணம், குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அந்த இடத்திற்குச் செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட கட்டணங்களை முறையாக செலுத்தி வருவதாகவும் கூறினர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மாலிக், பர்கத், ஹக்கீம், ஹசீனா உள்ளிட்டோர் தங்களது இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையை பயன்படுத்தி அராஜகமாக செயல்பட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். தாங்கள் ஊரில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி தங்களது மூன்று வீடுகளை இடித்து தரைமட்டமாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.இதுகுறித்து மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உதவி ஆய்வாளர் சிவன்யா எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும், இதேபோல் திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபனிடம் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்காமல் எதிர்தரப்புக்கு ஆதரவாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இன்று காலை விழுப்புரம் டிஐஜி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட டிஜிபி அருள்அரசு, புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாக தெரிவித்தனர். மேலும், வீடுகளை இடித்ததாக கூறப்படும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது இடத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தங்களது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், சென்னையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவதுடன், நியாயம் கிடைக்காவிட்டால் தலைமைச் செயலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பேட்டி உள்ளது















