மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ; திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை நகரில் இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு யாகசாலை கொட்டகை அமைத்து கடந்த 21ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜபூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கால யாகசாலை தொடங்கி தீபாராதனை காட்டப்பட்டது. கும்பாபிஷேக விழாவான இன்று 4 கால யாகசாலை பூஜை நிறைவுற்று பூர்ணாஹுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க புறப்பட்டாகி கோயில் விமான கலசத்தை அடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் மகாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்














