ஆறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டதால் திருவாரூர் மாவட்டத்தில் கலையிழந்த ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் – தண்ணீர் இருக்கும் ஒரே ஒரு குளமான தியாகராஜ திருக்கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளக்கரையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் உற்சாகமாக வழிபாடு நடத்தினர்.
ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள ஆறுகளுக்கு சென்று பழங்கள் மற்றும் அரிசி உள்ளிட்டவைகளை வைத்து வணங்கி வழிபாடு நடத்தி தங்கள் கை மற்றும் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்ச்சியுடன் இயற்கை அன்னையை வழிபடுவது தொன்றுதொட்டு பராம்பரியமாக இருந்துவந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் இதுவரை அணை திறக்கப்படவில்லை.
இதனால் ஆறுகளில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஆறுகள் மற்றும் குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால், திருவாரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் கலை இழந்தது காணப்படுகிறது.
குறிப்பாக காசிக்கு நிகரானதும், சைவ சமயத்தின் தலைமைபீடமான திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் வற்றாத புனித தீர்த்த குளமான 5 வேலி நிலப்பரப்பில் காணும் திருவாரூர் கமலாலயத்திருக்குளத்தில் ஆடிப்பெருக்கு விழாவிளை புதுமன தம்பதிகள், சுமங்கலி பெண்கள், கன்னிப்பெண்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
அந்தவகையில் தண்ணீர் முன்பாக தேங்காய், வாழைப்பழம், மஞ்சள், கண்ணாடி, பச்சரிசி, வெள்ளம் மற்றும் கனிவகைகள் உள்ளிட்ட மங்கள பொருட்களை வாழை இலையில் படையலிட்டு தூப தீபம் காண்பித்து நீரை காவேரி அன்னையாக மனதில் நிலைநிறுத்தி வணங்கினர்.
புதுமண தம்பதிகள் திருமணத்தின்போது கழுத்தில் கட்டிக்கொள்ளும் தாலிகயிற்றை மாற்றி புதிதாக மஞ்சள் கயிற்றை அணிந்துகொண்டும், கன்னிப்பெண்களது கழுத்தில் வயது முதிர்ந்த சுமங்கலிபெண்கள் மஞ்சள் கயிற்றினை கட்டி விரைவில் திருமணம் கைகூட வேண்டியும், சுமங்கலிபெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள்கயிற்றை கழுத்தில்கட்டிக்கொண்டு தாலிபாக்கியம் நிலைத்திட வேண்டியும் இந்த சடங்குகளை மேற்கொண்டனர்.
மேலும் நாட்டில் மழைபெருகி நீர்வளம் செழித்தோங்கி அதன் மூலம் விவசாய தொழில் சிறந்து விளங்கவேண்டியும் நாட்டு மக்கள் பசி பட்டினி நீங்கி சுபிட்சமாக வாழவேண்டியும் காவேரி அன்னையை வழிபட்டு ஆராதனை செய்தனர்.














