மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை பள்ளி வாகனத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பள்ளி வேன்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு:- மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் பள்ளி வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆனந்தகூத்தன் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பாலாஜி என்பவரின் மனைவி அரசி என்பவர் தனது இரண்டு குழந்தைகளை பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்ட போது, மகிழ்வேதம் என்ற ஒன்றரை வயதுடைய மற்றொரு ஆண் குழந்தை பள்ளி வாகனத்தின் பின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா பிரியா உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவ்வழியாக சென்ற வாகங்களை நிறுத்தி உள்ளே சென்று சோதனை நடத்தினார். மாணவர்களை அழைத்து வந்த பேருந்து மற்றும் வேன்களில் அவசரகால வெளியேறும் வசதி உள்ளதா எனவும், உதவியாளர் இருக்கிறாரா என்றும், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்றும் அவர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் 2012-ன் படி அனைத்து விதிகளும் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்று நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். முக்கியமாக, ஒவ்வொரு பேருந்திலும் ஒரு உதவியாளர் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் முதலுதவி பெட்டி, அவசரக்கால வழி மற்றும் சிசிடிவி கேமரா போன்ற அனைத்து அடிப்படை பாதுகாப்பு வசதிகளும் பேருந்துகளில் இருக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.













