சோழவரம் அருகே பொன்னியம்மன் ஆலயத்தில் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா. திரளான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பெரிய முல்லைவாயல் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ பொன்னியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 20ஆம் ஆண்டு ஆனி திருவிழா மற்றும் 12ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர். தீ மிதி திருவிழா நாளான இன்று அம்மனுக்கு சம்பிரதாய பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கரகம் முன்னே வர இதை தொடர்ந்து போத்துராஜா, அக்னிச்சட்டி ஏந்தியவர்கள் முதலில் குண்டம் இறங்க காப்பு கட்டி விரதமிருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். தீமிதி திருவிழாவை முன்னிட்டு இரவை பகலாக மாற்றும் வகையில் கண் கவர் வான வேடிக்கை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.














