மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு அளித்துள்ளேன், 70 வருடங்களாக குடியிருந்து வரும் தங்கள் வீட்டை சுற்றி வேலி வைத்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்ய சொல்லியும் எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை என்று அதிகாரிகளை திட்டி தீர்த்த குடும்பத்தினர். இங்கு சத்தம் போட்டால் தான் வேலையே நடக்கிறது வாழ்வதா சாவதா? குடும்பத்தினர் கடுமையாக வாக்குவாதம் செய்து கதறல். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று குமுரிய இளைஞர் மற்றும் குடும்பத்தினரை போலீசார் சமாதானப்படுத்தினர்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா சட்டநாதபுரம் ஆற்றங்கரை தெருவில் வசித்துவரும் கோவிந்தசாமி. இவர் இன்று தனது மனைவி ராஜலட்சுமி மகன் ராஜ்குமார் ஆகியோருடன் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்தனர். கூட்டரங்கு வாயிலுக்கு வந்தவர்கள் மனு அளிக்க உள்ளே செல்லாமல் இடப்பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க கோரி 3 முறை மனு அளித்துள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தும் அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவே இல்லை என்று குடும்பத்தினர் கூட்டரங்கின் முன்பு கடுமையாக கூச்சலிட்டு தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அப்போது ஓடிவந்த போலீசாரிடம் குடும்பத்தினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு வருடமாக தங்கள் பிரச்சனைக்காக அலைந்து வருவதாகவும் இதற்கு தீர்வு ஏற்படுத்தித் தரவில்லை என்றும், இங்கே போராட்டம் செய்தால் தான் தீர்வு கிடைக்கும் என்றும் இங்கேயே உயிரை விடுவேன் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ராஜலட்சுமி மயங்கி விழுந்தார். போலீசார் மயக்கத்தை தெளிய வைத்து தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். இதுகுறித்து ராஜ்குமார் கூறுகையில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த தாங்கள் நான்கு தலைமுறைகளாக குடியிருந்து வருவதாகவும் , தங்கள் வீட்டின் தெற்கு புறத்தை கோபாலகிருஷ்ணன் என்பவரும் கிழக்கு புறத்தை அகிலா என்பவரும் வாங்கியுள்ளனர். தாங்கள் குடியிருக்கும் இடம் நத்தம் புறம்போக்கு என்றும் எழுபது ஆண்டுகளாக குடியிருந்து வருவதால் பலமுறை பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்தோம். ஆனால் எங்கள் இடத்தை கோபாலகிருஷ்ணன் இடத்தை பராமரிப்பு செய்யும் விஸ்வநாதன் தங்களுக்கு இடம் மாற்றி பட்டா கொடுத்துள்ளதாகவும் வீட்டை காலி செய்ய சொல்கிறார்.. நாங்கள் வசித்து வரும் இடத்தில் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கான அட்டை போன்ற அனைத்து அரசு வழங்கிய ஆதாரங்கள் உள்ளது. ஆனால் விஸ்வநாதன் என்பவர் இடம் எங்களுக்கு சொந்தமானது வீட்டை இடித்து தாருங்கள் உங்களுக்கு குடிதண்ணீர் கிடையாது என்று கூறி தண்ணீர் குழாயை உடைத்து வீட்டை சுற்றி வேலி வைத்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம் என்று கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்திடம் அழைத்துச் சென்றனர். உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் உத்தரவிட்டார். மக்கள் குறைதீர் கூட்டத்தில் பலமுறை மனு அளித்தும் அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் மீண்டும் பல்வேறு நபர்கள் தொடர்ந்து மனு அளித்து வரும் நிலையில் இளைஞர் மற்றும் அவரின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை திட்டி தீர்த்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.














