கன்னியாகுமரி மாவட்டம்: திமுக ஆட்சியில் பத்திர பதிவுத்துறை மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது. அப்போதைய பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த மூர்த்தியால் தமிழக அரசுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது – கலப்பை மக்கள் இயக்க தலைவரும் நிலம் வாங்குவோர் வெறுப்போர் சங்க தலைவருமான பி.டி செல்வகுமார் நாகர்கோவிலில் பரபரப்பு பேட்டி.
தமிழகப் பத்திரத்துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஏழை எளிய மக்களின் சொத்துரிமையைப் பறிக்கும் வகையில் மிகப்பெரிய ஊழல்களும் மோசடிகளும் நடந்து வருவதாகக் கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி. செல்வக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக நாகர்கோவிலில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சியில், லஞ்சம் மற்றும் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டுவரக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதற்கு நேர்மாறாகப் பத்திரப்பதிவுத் துறையில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சில நடைமுறைகளால், ஏழை எளிய மக்கள் 3 சென்ட், 4 சென்ட் எனச் சிறு நிலங்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாமான்ய மற்றும் கிராமப்புற மக்கள் சொத்துக்களை வாங்குவதைத் தடுக்கும் வகையில், சில பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் சதி செய்து, சொத்துக்களைப் பிரித்து விற்பனை செய்ய முடியாதவாறு முடக்கியுள்ளனர். இதனால், ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குச் சொத்தைப் பிரித்துக் கொடுக்கவோ, அவசரத் தேவைகளுக்கோ அல்லது பிள்ளைகளின் திருமணத்திற்கோ நிலத்தை விற்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் 10 சதவீத கட்டணத்தைப் பெற்றுக்கொள்ளும் அரசு, 2016-ஆம் ஆண்டிற்குப் பிறகு பதியப்பட்ட பத்திரங்களை மறுபதிவு செய்ய மறுக்கிறது. இதனால், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தமிழகத்தில் நிலங்களை வாங்க முடியாமல் அண்டை மாநிலமான கேரளாவிற்குச் சென்று பத்திரப்பதிவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பத்திரப்பதிவு சரிவு – ₹10,000 கோடி இழப்பு:
தமிழகத்தில் நிலவி வரும் இந்தத் தடைகளால், தினசரி 300 டோக்கன்கள் வழங்கப்பட்ட இடங்களில் தற்போது வெறும் 25 டோக்கன்கள் மட்டுமே பதியப்படும் அவல நிலை உள்ளது. இந்த முறைகேடுகளால் தமிழக அரசுக்குக் கிட்டத்தட்ட ₹10,000 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரு சென்ட் நிலத்திற்கு ₹50,000 வரை சார்-பதிவாளர்களால் லஞ்சமாகக் கோரப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
பத்திரப்பதிவில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், அதனை நிவர்த்தி செய்து தர ’47-ஏ’ பிரிவின் கீழ் வழிவகை உள்ளது. ஆனால், கன்னியாகுமரி மாவட்டப் பதிவு அலுவலகங்களில் இப்பிரிவின் கீழ் பணிகளைச் செய்ய மறுப்பதாகவும், முறையான கவனிப்பு இருந்தால் மட்டுமே பணிகள் நடப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏழை எளிய மக்களுக்குச் சொத்துரிமை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்துறையில் உடனடியாகத் தலையிட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆட்சிக் காலத்தில் இருந்தது போலப் பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்றும், இந்த ₹10,000 கோடி ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பி.டி. செல்வக்குமார் வலியுறுத்தியுள்ளார்














