மயிலாடுதுறையில் வீட்டுமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டும், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் திருநங்கைகள் 20 பேர் போராட்டம்:-
மயிலாடுதுறையில் 50-க்கு மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்தினரிடமிருந்து விலகி தனியே வாடகை வீடுகளில் வசிப்பதால், தாங்கள் சொந்தமாக வீடு கட்டி குடியேற அரசு தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் கிராமத்தில் இவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்திருந்த நிலையில், அப்பகுதியில் நிலஎடுப்பு பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த இடத்தை வருவாய்த்துறையினர் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 20 பேர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் அலுவலகம் எதிரே சாலையில் அமர்;ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வருவாய்த்துறையினர் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால், வட்டாட்சியர் அலுவலக வாசலை அடைத்து அமர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உறுதியளித்தபடி வள்ளாலகரம் ஊராட்சியில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், இல்லையெனில் மயிலாடுதுறை தற்காலிக பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்திலோ அல்லது ஆதீனத்துக்கு சொந்தமான இடத்திலோ தங்களுக்கு குடியிருக்க பட்டா வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநங்கைகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.














