சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், தனிப்படை காவல்துறையினரின் விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு, தற்போது ஒரு முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கில் பொய் புகார் அளித்ததாகக் கூறப்படும் நிகிதா, மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
மடப்புரம் அஜித்குமார் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நான்கு தனிப்படை போலீசார் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, “செய்யாத குற்றத்திற்காக ஒருவரை அடித்தே கொலை செய்துள்ளனர். இவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இந்த வழக்கில் பொய்யான புகார் அளிக்கப்பட்டதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்த நபர் மீது சிபிஐ விசாரணை நடத்தியுள்ளதா?” எனக் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, பொய் புகார் அளித்ததாகக் கருதப்படும் நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) அசன் முகம்மது முன்னிலையில் நேற்று ஆஜரான நிகிதாவிடம், “உங்களது புகாரை முடித்து வைக்க சிபிஐ முடிவு செய்துள்ளது, இதற்கு உங்கள் கருத்து என்ன?” என்று நீதிபதி வினவினார். அதற்கு நிகிதா, “எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை, வழக்கை முடித்து வைக்கலாம்” என்று பதிலளித்தார். இதனைக் கேட்ட நீதிபதி, இந்த விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் மார்ச் 9-ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.
நீதிமன்ற விசாரணைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நிகிதா, “எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது. எந்த அரசியல்வாதியோ அல்லது வழக்கறிஞரோ என்னை இயக்கவில்லை. எனது தொலைபேசி மூலம் டெல்லிக்கு எந்த அழைப்பும் செல்லவில்லை என்பது சிபிஐ விசாரணையில் நிரூபணமாகிவிட்டது. நான் முதலில் அறநிலையத்துறை அதிகாரிகளிடம்தான் புகார் அளித்தேன், அதன் பிறகுதான் காவல் நிலையத்திற்குச் சென்றேன். அஜித்குமார் உயிரிழந்த செய்தி கேட்டு நாங்கள் அழுதோம். நான் காவல் நிலையத்தில் இருந்தவரை அவரும் அங்கேயேதான் இருந்தார். தனிப்படையினர் அவரை அழைத்துச் சென்று விசாரித்தது எனக்குத் தெரியாது” எனத் தனது தரப்பு விளக்கத்தை உருக்கமாகத் தெரிவித்தார்.
காவல்துறையினரின் அத்துமீறல் மற்றும் பொய் புகார்களின் பின்னணியில் ஒரு உயிர் பறிபோயுள்ள இந்த விவகாரத்தில், சிபிஐ-யின் அடுத்தகட்ட அறிக்கை மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.














