நெல் கொள்முதலில் ஈரப்பத அளவை தளர்த்த வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது என்றும், இந்த முடிவு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் குறுவை பருவ நெல் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியான கனமழையால் நெல் தானியங்களில் ஈரப்பதம் அதிகரித்து வருவதாகவும், அதனால் கொள்முதல் சிரமம் ஏற்படாமல் இருக்க தற்போதைய 17% ஈரப்பத அளவை 22% ஆக உயர்த்த வேண்டும் என்று ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பின்னர் பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடிய நிலையில், தமிழ்நாட்டின் இந்த அவசர கோரிக்கை மத்திய தரப்பில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் அதிருப்தி தெரிவித்த ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், “விவசாயிகளிடையே பிரதமர் பேசிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகம். நெல் ஈரப்பத தளர்வு கோரிக்கையை ஏன் நிராகரித்தீர்கள்? விவசாயிகளின் கண்ணீர், குரல்… எதுவும் பிரதமருக்கு கேட்கவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டுகளில் இதே கோரிக்கைக்கு மத்திய அரசு பலமுறை அனுமதி வழங்கியிருந்தது, இந்த ஆண்டு மட்டும் ஏன் மறுப்பு? கனமழையால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு நிவாரணமும் தராமல், ஈரப்பதத்தையும் தளர்க்காமல் இருப்பது எப்படி நன்மை செய்யும்? என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிக்கப்பட்டதற்குப் பின்னர், இன்னொரு முக்கிய கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தமிழக அரசின் அதிருப்தியாகும்.
மத்திய அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்து, நெல் கொள்முதல் சிக்கலில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

















