சென்னை :
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு?, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான கேபிஒய் பாலா, தற்போது சினிமாவுக்குள் நுழைகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் காந்தி கண்ணாடி திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜெய்கிரண் தயாரிப்பில், ரணம் படத்தை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ள இப்படத்தில், இயக்குனர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பு விவேக் – மெர்வின்.
இப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசின பாலா, தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“பொதுவாக நாயகிகள் தேர்வு அலுவலகத்தில் நடக்கும். அங்கு கதை கேட்டவுடன் ‘யார் ஹீரோ?’ என்று கேட்பார்கள். நான் ‘பாலா’ என்று சொன்னதும், ‘பிறகு சொல்கிறேன்’ என்று சொல்லிவிட்டு செல்வார்கள். இது அவர்களுடைய தவறு இல்லை. இப்படியே 50 நடிகைகள் என்னை புறக்கணித்தனர்.
நானும் பெரிய நடிகர் இல்லை. ஆனால் 51வது ஆளாக வந்த நமிதா கிருஷ்ணமூர்த்தி, கதையை கேட்டவுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், ‘கண்டிப்பாக பண்ணுவேன்’ என்று ஒப்புக்கொண்டார்,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் பாலா. கிராமங்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது, உடல் நலம் பாதிக்கப்பட்டு, பொருளாதார நெருக்கடியில் உள்ள நடிகர்களுக்கு உதவுவது போன்ற பணிகளையும் செய்து வருகிறார்.















