100 வயது பாட்டியின் பிறந்தநாள் விழா. மகன்கள், மகள்கள், முதல் எள்ளு பேத்தி வரை 44 பேர் பங்கேற்று கேக் வெட்டி கொண்டாட்டம். பாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்று மகிழ்ச்சி;-பாடல்பாடி அசத்தி அனைவரையும் மகிழ்வித்த பாட்டி:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி அம்பிகை (வயது 100) என்பவர் இன்று தனது நூறாவது பிறந்தநாள் விழாவை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். 3 மகன்கள், 3 மகள்கள், 17 பேரன், பேத்திகள், 20 கொள்ளு பேரன் கொள்ளுப்பேத்திகள், எள்ளு பேத்தி ஒருவர் என 44 பேர் அடங்கிய குடும்பத்தினர் இன்று அம்பிகை பாட்டியின் பிறந்தநாள் விழாவை அவரது இல்லத்தில் கோலாகலமாக ஒன்று கூடி கொண்டாடினர். அம்பிகை பாட்டி ஆரோக்கியமுடன் வாழ ஆயுள் விருத்தி ஹோமம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து பாட்டி அம்பிகை தனது 100வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடினார். தங்களது பாட்டிக்கு கேக்கு ஊட்டி விட்டு மகிழ்ந்து அவரிடம் ஆசீர்வாதம் பெற்று குடும்பத்தினர் அளவளாவி கொஞ்சி மகிழ்ந்தனர். தங்களின் பாட்டி சிறுதானியம் உணவுகள் மற்றும் ஆரோக்கியமான இயற்கையான உணவு முறைகளை உட்கொண்டு வருவதால் உடல் ஆரோக்கியத்துடன் நோய் நொடியின்றி வாழ்ந்து வருவதாகவும். நூறு வயதிலும் தங்கள் பாட்டி நன்கு நடமாட்டத்தில் உள்ள நிலையில் இன்றும் தனக்கு தேவையான மதிய உணவை தானே சமைத்து உண்பார் என்றும் பேப்பர் படிப்பார் என்றும் பேரன்கள் தெரிவித்துள்ளனர். 44 பேரும் பாட்டியுடன் சேர்ந்து குடும்ப புகைப்படம் எடுத்து கொண்டனர். தனிதனி குடும்பமாகவும், ஷெல்ஃபி எடுத்து கொண்டு மகிழ்ந்தனர். இதில் பங்கேற்ற கிராமத்தினர் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஒரே இடத்தில் சந்தித்து கொண்டதை அபூர்வமாக பார்த்து ரசித்தனர்.













