இந்தியா: 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாங்களே நேரடியாக வங்கிக் கணக்கைத் தொடங்க முடியும் என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுவரை 18 வயதிற்குள் உள்ளவர்கள் வங்கிக் கணக்கு தொடங்க, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பெயரில் மட்டுமே அது செய்யப்படவேண்டும் என்பது போல பல கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது அந்த தடைகளை தாண்டி, குழந்தைகளின் நிதி சுயாட்சி வளர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
புதிய RBI அறிவிப்பு என்ன சொல்கிறது?
- 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள், தாங்களே வங்கிக் கணக்கைத் தொடங்கி, டெர்ம் டெபாசிட், ATM கார்டு, ஆன்லைன் வங்கி சேவைகள் உள்ளிட்ட வசதிகளைப் பெறலாம்.
- கணக்கு தொடங்கும் குழந்தையின் கையொப்பம் வங்கியில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.
- வங்கிகள், சிறார்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் எளிதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் RBI வலியுறுத்தியுள்ளது.
- ஜூலை 1, 2025க்குள் இந்த புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தற்போதுள்ள கொள்கைகளில் மாற்றங்களை செய்ய வங்கிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
அப்போ 10 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள்?
10 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களும் வங்கிக் கணக்கு தொடங்க முடியும். ஆனால் அவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலரை (Guardian) வைத்து தான் கணக்கு திறக்க வேண்டும் என்பது பழைய விதி போலவே தொடரும்.
பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள்:
சிறார்களுக்கு வங்கிக் கணக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், பணம் எடுப்பதில் ஒரு வரம்பு விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கணக்கிலிருந்து எல்லா தொகைகளையும் முழுமையாக எடுக்க முடியாது – பாதுகாப்புக்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.