யூடியூப் பார்த்து கற்க வேண்டிய பல நல்ல விஷயம் இருக்கிறது ஆனால் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு துப்பாக்கி எப்படி செய்வது என்ற வில்லங்கத்தை பார்த்து துப்பாக்கி தயாரித்த 3 பேர் பண்ருட்டி அருகே கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் எஸ்ஐ வேல்முருகன் தலைமையிலான போலீசார் காடாம்புலியூர் பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை சோதனை செய்ததில் அவர்களிடம் துப்பாக்கி மற்றும் கத்தி இருப்பது தெரிந்துள்ளது.
அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் புறங்கணி கிழக்கு தெருவை சேர்ந்த உத்திரவேல் மகன் மணிகண்டன் (25). வேலன்குப்பம் தெற்குதெரு ராஜேந்திரன் மகன் விக்ரம் (25), பழைய பிள்ளையார்குப்பம், மாரியம்மன் கோயில் தெரு சந்தானபிரபு (32) என்று தங்களை பற்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் காட்டுப்பன்றி, முயல், எலி, அணில்களை வேட்டையாட யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரியவந்துள்ளது. உடனே காவல்துறை அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2 பிளாஸ்டிக் துப்பாக்கிகள், கத்தி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து உள்ளது.
இந்த சம்பவம் பண்ருட்டி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.