மயிலாடுதுறை அருகே காதலர்கள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அன்றைய தினம் வீட்டை அடித்து உடைத்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது , இருபதுக்கும் மேற்பட்டோர் காதலி மற்றும் அவரது உறவினர்களின் வீட்டை கற்கள் மற்றும் கட்டைகளால் அடித்து உடைக்கும் காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது :-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா புதுப்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் என்ற 19 வயது இளைஞரும் சாத்தங்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி சாத்தங்குடியில் கொட்டகை ஒன்றில் தூக்கிட்ட நிலையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பொறையார் போலீசார் இயற்கைக்கு மாறான மரணமாக வழக்கு பதிவு செய்தனர். பெண் வீட்டார் ஆணவ படுகொலை செய்து விட்டதாக பார்த்திபன் குடும்பத்தினர், விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மயிலாடுதுறையில் பெண் வீட்டாரால் தகனம் செய்யப்பட்டது.
காதலன் பார்த்திபன் உடல் நேற்று தரங்கம்பாடியில் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 29ஆம் தேதி காதலனின் உறவினர்கள் மற்றும் பலர் காதலி மற்றும் அவரது உறவினர்களின் வீட்டை அடித்து உடைத்தனர். தற்போது அந்த காட்சிகள் வெளியாகி இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 20க்கும் மேற்பட்டோர் கற்களைக் கொண்டும் , கட்டைகளைக் கொண்டும் இறந்த காதலியின் உறவினர் வீட்டை அடித்து உடைக்கும் காட்சிகளும் , வீட்டில் உள்ளவர்கள் பதறி அலறும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.













