திருவாரூரில் தூய்மை பணியாளரை தாக்கிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி – சம்பவம் நடந்து 24 மணி நேரமாகியும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யாததால் பொதுமக்கள் அதிருப்தி.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தங்குடி ஊராட்சியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக ராஜ்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் தூய்மை பணி செய்துவிட்டு கிளம்பிய நிலையில், பழையனூர் பகுதியை சேர்ந்த உதயபிரகாஷ் என்பவர் தூய்மை பணியாளர் ராஜ்குமாரை அழைத்து பழையனூர் ஊராட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள கூறியுள்ளார்.
கொத்தங்குடி ஊராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர் ராஜ்குமாரை, பழையனூர் ஊராட்சி பகுதியில் தூய்மை பணியை மேற்கொள்ள உதய பிரகாஷ் கூறியுள்ளார். இதனை மறுத்த தூய்மை பணியாளரை உதய பிரகாஷ் மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட மூன்று நபர்கள் தூய்மை பணியாளர் ராஜ்குமாரை தகாத வார்த்தைகள் கூறி திட்டியும் அடித்தும் காயப்படுத்தி உள்ளனர். இதனால் மனவேதனையுடன் காயமடைந்த தூய்மை பணியாளர் ராஜ்குமார் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூய்மை பணியாளரை தாக்கிய உதய பிரகாஷ் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி என்பதால் அவர் மீது காவல்துறையினர் இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. 53 வயதான தூய்மை பணியாளரை தாக்கிய தமிழக வெற்றிக்கழக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொத்தங்குடி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













