முன்னாள் விழுப்புரம் கால்பந்தாட்ட வீரர்.மைக்கல்ராஜ் 5ம் ஆண்டு நினைவு தினம் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் முகமது ஹனிபா நினைவை யொட்டி, மாநில அளவிலான ஏழ்வர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
விழுப்புரம் வடக்கு ரயில்வே கால்பந்து மைதானத்தில் மாவட்ட கால்பந்தாட்ட கழகங்கள் சார்பில் இரு தினங்களில் மாநில அளவிலான ஏழ்வர் கால் பந்தாட்ட போட்டி நடந்தது.
இதில், விழுப்புரம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி சேலம் சென்னை, செய்யார், புதுச்சேரி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 22 கால்பந்தாட்ட அணிகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் இறுதி போட்டியில், முருகன் அகாடமி அணியும், மகாராஜபுரம் அணியும் விளையாடியது. இதில், முருகன் அகாடமி அணி முதலிடத்தை தட்டி சென்றது.
இந்த போட்டியில் வென்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 15 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில், இரண்டாம் இடத்தை மகாராஜபுரம் அணியும், மூன்றாவது இடத்தை விழுப்புரம் எப்.சி., அணியும், நான்காம் இடத்தை எஸ்.பி.ஆர்., அணியும் தட்டி சென்றது.
மாநில கால்பந்தாட்ட போட்டியில் வென்ற அணிகளுக்கு தி.மு.க., நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், ஸ்ரீபதி, வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் பரிசளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கால்பந்தாட்ட கழகம் மாவட்ட இணை செயலாளர் அன்பு மற்றும் எம்.ஏ.எப்.சி., அணி நிர்வாகிகள் செய்தனர்.













