மதுரை: நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பாக விளங்கும் சி.பி.ஐ. மீதான நம்பிக்கை இன்று பொதுமக்களிடையே குறைந்துவிட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. இந்த நம்பிக்கையை மீட்டெடுக்க, அதன் விசாரணை முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
2007 முதல் 2009 வரை திருநெல்வேலியில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் தலைமை மேலாளராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர், ரூ.2 கோடி கடன் முறைகேடாக வழங்கியதாக சி.பி.ஐ. வழக்குப் பதிந்தது. 2019ஆம் ஆண்டு மதுரை சி.பி.ஐ. நீதிமன்றம் பலரை தண்டித்ததுடன், ஐந்து பேரை விடுவித்தது. இந்த தண்டனையை எதிர்த்து 8 பேர் மேல்முறையீடு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன், சி.பி.ஐ. குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதை சுட்டிக்காட்டி, தண்டனை உத்தரவை ரத்து செய்து அனைத்து மனுதாரர்களையும் விடுவித்து உத்தரவிட்டார்.
இதனுடன், சி.பி.ஐ. இன்று பாரபட்சமான விசாரணை நடைமுறைகளை பின்பற்றுவதாகவும், பல வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளை தவிர்த்து கீழ்மட்ட அதிகாரிகளுக்கு மட்டுமே வழக்குப் பதியப்படுவதாகவும் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
நீதிமன்றம் சி.பி.ஐ. இயக்குனருக்கு கீழ்கண்ட பரிந்துரைகளை வழங்கியுள்ளது:
எப்.ஐ.ஆர். மற்றும் இறுதி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் விவரங்களை கண்காணிக்க வேண்டும்.
வழக்குப்பதிவுகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தனி சட்ட நிபுணர் குழு நியமிக்கப்பட வேண்டும்.
விசாரணை அதிகாரிகள் தொழில்நுட்ப நிபுணத்துவம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சி.பி.ஐ. தன்னுடைய பிம்பத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது நீதிமன்றத்தின் முக்கியமான அறிவுரை.