சென்னை: வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய உத்தரவை மாற்ற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பால்வளத்துறை அமைச்சராக முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, சாத்தூரை சேர்ந்த ரவீந்திரனிடம் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் விஜய நல்லதம்பி வழியாக 30 லட்சம் ரூபாய் வரை பெற்றதாக கூறப்படுகிறது. வேலை கிடைக்காததால், ரவீந்திரன் விருதுநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கோரி ரவீந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததுடன், அமலாக்கத்துறையின் நிலை பற்றிய அறிக்கையும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை காவல் துறையினர் செயல்படுத்தாததால், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை மாற்றக் கோரி காவல் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றத்தில் இதே விடயம் நிலுவையில் உள்ளதால், ஏற்கனவே வழங்கிய உத்தரவை மாற்ற முடியாது என நீதிபதி பி.வேல்முருகன் தெரிவித்தார்.