பள்ளி தலைமை ஆசிரியர் திட்டியதால், பள்ளி வளாகத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை முயற்சி செய்த விவகாரம், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அரசின் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு 300 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்க தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 22 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர் இந்நிலையில் இப்பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராக உள்ள இந்திரகுமார்.43. என்பவர் தனது ஆதரவு ஆசிரியர்களை முன்னிறுத்தியும் மற்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் மரியாதை கொடுக்காததால் தலைமை ஆசிரியர் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என ஆசிரியர்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இதனால் ஆசிரியர்களுக்குள் அவ்வப்போது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந்து உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடத்திய விசாரணையில் பொய்யான புகார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை நடத்திய விசாரணையில் பங்கேற்ற மாணவிகளை தலைமை ஆசிரியர் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட பிளஸ் டூ பயிலும் 16 வயது மாணவி ஒருவர் தலைமை ஆசிரியருக்கு பயந்து நேற்று பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். வீட்டில் உள்ளவர்கள் பள்ளிக்குச் செல்ல வற்புறுத்தியதால் மனமுடைந்த அந்த மாணவி வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளி மைதானத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பூம்புகார் போலீசார் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தலைமை ஆசிரியர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது














