மும்பை இந்தியன்ஸ் 3வது இடத்திற்கு முன்னேற்றம்!
2025 ஐபிஎல் தொடரின் பாதி முடிவடைந்த நிலையில், பல அணிகள் தங்களது ஆட்டத்தைக் கட்டுக்கோப்பாக அமைத்து வெற்றிப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றன. தொடக்க ஆட்டங்களில் போராடிய மும்பை இந்தியன்ஸ் அணி, தற்போது தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ், அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத்தை நிர்ணயமிடப்பட்ட 20 ஓவர்களில் 143 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளுடன் பளிச் காட்டினார்.
பின்னர் துருதுருப்பாக களமிறங்கிய மும்பை, 70 ரன்கள் அடித்த ரோகித் சர்மா மற்றும் 2, 3வது இடங்களில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரின் ஒத்துழைப்பில் 15.4 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் மும்பை இந்தியன்ஸ் 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடக்கத்தில் 4 தோல்விகள் சந்தித்த அணிக்கு இது பெரிய மீள்ச்சி எனப் பார்க்கப்படுகிறது.

அம்பயர் சர்ச்சை: இஷான் கிஷன் அவுட் விவகாரம்
ஆட்டத்தில் ஒரு சர்ச்சைக்குரிய தருணம் அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. SRH பேட்டிங் நேரத்தில், தீபக் சாஹரின் பந்தை சந்தித்த இஷான் கிஷன், அடிக்க முற்பட்ட போது பந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. விக்கெட் கேட்கப்படாத நிலையில், அம்பயர் தடுமாறி, பின்னர் அவுட் கொடுத்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ரீப்ளேவில் பந்து பேட்டில் எட்டவில்லை என்பது தெளிவாகத் தெரிந்ததால், சமூக வலைதளங்களில் மும்பை இந்தியன்ஸ் மீதான பழைய சர்ச்சைகள் மீண்டும் எழுந்துள்ளன. “மும்பை இந்தியன்ஸா, அம்பயர் இந்தியன்ஸா?” எனக் கலாய்ப்புகள் தொடங்க, மற்றொரு தரப்பினர் “இஷான் கிஷன் வெளியே செல்லும் முன்பே அம்பயர் ஒயிடுக்கு கையை தூக்கினார்” எனவும் விளக்குகின்றனர்.
தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த மும்பை, தற்பொழுது முழு ஃபார்மில் திரும்பி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா, பும்ரா, வில் ஜாக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தங்களது ஆட்டத்தை மீண்டும் அடைந்துள்ளனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில், மும்பை பிளேஆஃப் கனவிற்கு தைரியமான அடித்தளத்தை அமைத்துள்ளது.
“மேலேறி வாரோம், ஒதுங்கி நில்லுங்க!” என ரசிகர்கள் உற்சாகமாகச் சொல்கின்றனர்.