தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத் துறை (Enforcement Directorate) நடத்திய சோதனை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த நீதிமன்றம், அதிருப்தியும், கடுமையான விமர்சனங்களையும் பதிவு செய்தது.
25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை:
மார்ச் 6-ஆம் தேதி, டாஸ்மாக் தலைமையகம், மதுக்கொள்முதல் ஆலைகள், மற்றும் விற்பனை நிலையங்கள் என 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை செய்தது. இதில், ரூ.1000 கோடிக்கு மேல் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.
தமிழக அரசின் மனுவில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:
சோதனையின் போது, பெண் அதிகாரிகள் நீண்ட நேரம் வைத்திருத்தல், செல்போன்கள் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட காரணங்களால் விசாரணை சட்டவிரோதம் என கூறப்பட்டது. மேலும், சிலரிடம் கட்டாயமாக கையெழுத்து பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர், அரசு ஊழியர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பது கடமை எனக் கூறியதோடு, பெண் அதிகாரிகளை ‘கேடயமாக’ பயன்படுத்தி விசாரணையை தடுக்க முயற்சிப்பது துரதிஷ்டவசமானது என விமர்சித்தனர்.
கூட்டாட்சி தத்துவம் இந்த வழக்கிற்கு பொருந்தாது:
“சோதனைக்கு அரசு அனுமதி தேவையா?” எனக் கேள்வியெழுப்பிய நீதிபதிகள், கூட்டாட்சி தத்துவம் மக்கள் நலனுக்காகவே இருக்கவேண்டும். ஆனால் தேசத்திற்கு எதிரான குற்ற விசாரணைகளை தடுப்பதற்காக அதை பயன்படுத்த முடியாது என்று கடுமையாகக் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கில் அரசியல் உள்நோக்கம் உள்ளது எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரணைக்குரியவை அல்ல என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. மேலும், அமலாக்கத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தலாம் என முழுமையான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.