ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாக தயாரானது.
இதன் தொடர்ச்சியாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ரகசிய நடவடிக்கையில், மே 7-ஆம் தேதி அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை விரிந்த இந்த தாக்குதலின் முக்கிய தலைமைப் பொறுப்பை இரண்டு வீரப்பெண்கள் வகித்தனர். அவர்கள் — கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங்கமாண்டர் வியோமிகா சிங்.

இந்த தாக்குதலைப் பற்றி கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்ததாவது:
“பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரவு 1.05 மணி முதல் 1.30 மணி வரை நடந்த இந்த நடவடிக்கையில், பயங்கரவாதக் குழுக்கள் திட்டமிட்டு இருந்த முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன. பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதல், தீவிரவாதத்தின் முதுகெலும்பை முற்றிலும் உடைத்துவிட்டது.”
36 வயதான கர்னல் சோஃபியா குரேஷி, இந்திய ராணுவத்தின் கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் பிரிவில் பணியாற்றுகிறார். குஜராத்தைச் சேர்ந்த இவர், உயிர்வேதியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1999-ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த சோஃபியா, 2006-இல் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை உறுப்பினராக காங்கோவில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.
2010-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளார். 2016-இல், 18 நாடுகள் பங்கேற்ற சர்வதேச ராணுவப் பயிற்சியில், இந்தியக் குழுவின் தலைமை பொறுப்பை வகித்த முதல் பெண் அதிகாரி என்ற பெருமையும் இவருக்கே உரியது.
மேலும், பன்னாட்டு ராணுவ பயிற்சியில் இந்திய ராணுவத்துக்கு தலைமை தாங்கிய முதல் முஸ்லீம் பெண் அதிகாரி என்பதும் சோஃபியாவின் சாதனையை மேலும் சிறப்பிக்கிறது.
ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த இவரது தாத்தா, இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இவரது கணவரும் தற்போது ராணுவத்தில் சேவை செய்து வருகிறார்.