சென்னை :
சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ஒருவர், ஃபாலோயர் எண்ணிக்கை குறைவதால் வாழ்க்கையை இழந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் Content Creator-ஆக செயல்பட்ட மிஷா அகர்வால், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தற்கொலை செய்து கொண்ட செய்தி, உலகை அதிரவைத்துள்ளது.
மிஷா, ஒரு அழகு சாதனப் பிராண்டான “மிஷா அகர்வால்” நிறுவனத்தின் நிறுவனர் என்றும், ஏப்ரல் 25ஆம் தேதி பிறந்த நாளைக் கொண்டாடவிருந்த நிலையில் இந்த பரிதாப முடிவை எடுத்தது அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
தன் மரணத்திற்குப் பின்னர், அவரது சகோதரி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். “மிஷாவின் வாழ்க்கையின் நோக்கம் – 1 மில்லியன் ஃபாலோயர். ஆனால் இறப்பதற்கு முன் 3.5 லட்சம் ஃபாலோயர்ஸ் மட்டுமே இருந்தனர். தினசரி அந்த எண்ணிக்கை குறைந்தது, அவளைக் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்தது. அவள் தன்னை பயனற்றவள் என உணர ஆரம்பித்தாள்,” என உணர்ச்சிமிகு வார்த்தைகளில் கூறியுள்ளார்.
“மிஷா, எல்.எல்.பி பட்டதாரி; பி.சி.எஸ்.ஜே தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். ஆனால், இன்ஸ்டாகிராம் வாழ்க்கையின் எல்லாமாகவே பாவித்தாள். பலமுறை அழுது, ‘ஜிஜா, ஃபாலோயர் குறைந்தா நான் என்ன செய்வேன்?’ என கேட்டாள். நாங்கள் எவ்வளவோ புரிய வைத்தாலும் அவள் கேட்கவில்லை,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் மிகவும் பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில், நடிகை டாப்ஸி, “மிகவும் வேதனையை தரும் சம்பவம். ஒவ்வொரு வாழ்வும் மதிப்புமிக்கது,” என தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இன்னொரு சம்பவம், குஜராத்தின் சூரத்தில் நடந்துள்ளது. குடியானா கிராமத்தைச் சேர்ந்த பிரதீக் படேல், தினமும் ஜிம்மில் எடுத்த ரீல்ஸ்களை பதிவிட்டு வந்தார். 300-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருந்தும், ஃபாலோயர் எண்ணிக்கை 7,923 ஆகவே இருந்ததால் மனவேதனையில் இருந்த அவர், ஏப்ரல் 1ஆம் தேதி விஷம் அருந்தி உயிரை மாய்த்தார்.
இவ்வாறு, சமூக வலைதளங்களில் ஆதரவு குறைவதால் வாழ்க்கையே பயனற்றதென எண்ணி உயிரை மாய்த்துக் கொள்வது, இன்றைய தலைமுறையின் மனநிலையை சிந்திக்க வைக்கும் விஷயமாக உள்ளது. சமூக வலைதளங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் வாழ்க்கையின் முழுமையல்ல என்பது நம்மை நினைவூட்டுகிறது.