கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள விரியூரில் உள்ள மாதா கோவிலில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தேர் பவனி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், குதிரைச்சந்தல் பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரும் கலந்து கொண்டிருந்தார்.
விழா நடந்து கொண்டிருந்த வேளையில், ஒரு இளம் பெண் பத்மாவை அணுகி, “நான் இயற்கை உபாதை கழிக்கச் செல்கிறேன்; சிறிது நேரம் என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள்” எனக் கூறி பச்சிளம் குழந்தையை அவர் கைக்கு கொடுத்து விட்டுச் சென்றார்.
எனினும், பல மணி நேரங்கள் கடந்தும் அந்த இளம்தாய் திரும்பி வராததால் பத்மா பதற்றமடைந்து, அருகிலுள்ள சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் உடனே நடவடிக்கை எடுத்து, குழந்தைகள் நலக் குழுவினரை தொடர்பு கொண்டனர். பின்னர் விரைந்து வந்த குழுவினர் குழந்தையை தற்காலிகமாக காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, பச்சிளம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு மாயமான அந்த இளம்தாயை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிறந்து இரு நாட்களேயான அந்த பச்சிளம் குழந்தையை, திருவிழா கூட்டத்தில் இளம்தாய் தனியாக விட்டு சென்ற சம்பவம், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.