கொடைக்கானல் பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளி கட்டுமானத்துக்காக டூவீலரில் சென்று சிமென்ட் மூடை வாங்கி வரும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பள்ளியில் உள்ள கொடி கம்பம் , சேதமடைந்த தளத்தை சீரமைப்பு செய்ய கட்டுமான பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக நேற்று மாலை சிமென்ட் மூட்டை வாங்க 9ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் டூவிலரில் அனுப்பி வைக்கப்பட்டனர். கடையில் சிமென்ட் மூட்டை வாங்கி பள்ளிக்கு கொண்டு சென்றனர். பள்ளி மாணவர்களை படிப்பை தவிர்த்து பிற பணிகளுக்கு ஈடுபடுத்தக் கூடாது என்ற விதிமுறை இருந்தும் கட்டுமான பணிக்காக ஈடுபடுத்தியது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் டூவீலரை உரிமம் இல்லாமல் மாணவர்கள் இயக்கியதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளி தலைமையாசிரியர் வாசிமலை கூறுகையில்,”பள்ளியில் கட்டுமான சீரமைப்பு பணி நடக்கிறது. மாணவர்கள் சிமென்ட் மூட்டையை துாக்கி மட்டும்தான் விட்டனர். கொண்டு வரவில்லை” என்றார்.