ஆதரவற்ற மூதாட்டியின் கண்ணீரை துடைத்த சமூக சேவகர்
தஞ்சை மாவட்டத்தில் நெகிழ்ச்சி சம்பவம்…
தஞ்சை மாவட்டம்
திருவிடைமருதூர் தாலுகா நந்திவனம் கிராமத்தில், ஆதரவற்ற நிலையில் தார்பாய் கூரையின் கீழ் வாழ்ந்து வந்த 70 வயது மூதாட்டிக்கு, சமூக சேவகர் ஒருவர் தன் சொந்த முயற்சியாலும் நண்பர்களின் உதவியாலும் புதிய கனவு இல்லத்தை கட்டித் கொடுத்துள்ள நெகிழ்ச்சியான செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நந்திவனம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதுடைய மூதாட்டி தையல்நாயகி, குடும்ப சூழ்நிலை மற்றும் தனிமை காரணமாக ஆதரவின்றி தவித்து வந்துள்ளார். இவர் வசித்து வந்த பழைய வீடு முற்றிலும் சேதமடைந்த நிலையில், மழை மற்றும் வெயிலுக்குத் தார்பாய் கூரையை மூடிக்கொண்டு மிகவும் பரிதாபமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்துள்ளார்.
இதனைக் கண்ட அந்த கிராமத்து இளைஞர்கள், மூதாட்டியின் துயரத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இந்தத் தகவல் மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த சமூக சேவகர் பாரதி மோகனின் கவனத்திற்குச் சென்றுள்ளது.
உடனடியாக நந்திவனம் கிராமத்திற்கு விரைந்த பாரதி மோகன், மூதாட்டியின் தற்போதைய நிலையை நேரில் பார்வையிட்டு அறிந்து கொண்டார். பின்னர், தனது நண்பர்களின் உதவியுடன் சுமார் ரூ.2,20,000 மதிப்பீட்டில், அந்த மூதாட்டிக்கு அழகிய புதிய வீடு ஒன்றைக் கட்டித் கொடுத்துள்ளார்.
தமக்கு ஆதரவு கரம் நீட்டிய சமூக சேவகர் பாரதி மோகனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி தையல்நாயகி, ஆதரவின்றி தவித்த எனக்கு கடவுள் போல் வந்து இந்தக் கனவு இல்லத்தை கட்டித் தந்துள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கடந்த இருபது ஆண்டுகளாகத் தெருவோரங்களில் ஆதரவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிப்பது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களுக்குப் புத்தாடை அணிவித்து காப்பகத்தில் சேர்ப்பது போன்ற பல்வேறு நற்பணிகளை சமூக சேவகர் பாரதி மோகன் தொடர்ந்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஏழை எளிய மக்களுக்கு அரசு வழங்கும் வீடு வழங்கும் திட்டத்தில் இது போன்ற உண்மையான ஆதரவற்றவர்களைக் கண்டறிந்து உரிய வீடு கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்பொழுது, ஆதரவற்ற மூதாட்டியின் வாழ்க்கையில் ஒளியேற்றிய சமூக சேவகர் பாரதி மோகனுக்கு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களின் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.















