தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் மாணவிகள் 96.70% தேர்ச்சி விகிதத்தையும், மாணவர்கள் 93.16% தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளனர். மாவட்ட வாரியாக பார்த்தால், அரியலூர் (98.82%), ஈரோடு (97.98%), திருப்பூர் (97.53%) ஆகியவை முதலாவது மூன்று இடங்களை பிடித்துள்ளன.
இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அரசியல், கல்வி, சமூகத்துறை சார்ந்த பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜயும் தனது வாழ்த்துச் செய்தியை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
“12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே, மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி, புதிய இலக்கை நோக்கிச் செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள், தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து, தலைசிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்,” என அவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அதற்கு முன்னதாகவே, 2023ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுத்து பாராட்டு விழா நடத்தினார். அந்த விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கியிருந்தார்.
இதுபோல், இந்த ஆண்டும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கமாக பரிசுகள் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.