ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் விலை ரூ.2,300 ! – காசா மக்களின் பசிப்பிணியை மீண்டும் வெளிச்சமிடும் சம்பவம்

காசா :
பசிப்பிணியின் பிடியில் தவிக்கும் காசா மக்களுக்கு, ஒரு பிஸ்கட் பாக்கெட் கூட தற்போது கனவாகி விட்டது. இந்தியாவில் ரூ.5க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், காசாவில் தற்போது ரூ.2,300க்கும் மேல் விற்பனை ஆகிறது என்ற தகவல் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போரால் சீர்குலைந்த காசா பகுதியில், உணவுப் பொருட்கள் பெரும் பஞ்சத்துடன் விலை ஏற்றத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு பதிவு, பார்லே-ஜி பிஸ்கட் ஒரு பாக்கெட் 24 யூரோக்கள் (தோராயமாக ரூ.2,342) என்ற அதிர்ச்சி விலையில் விற்கப்படுவதாகக் கூறியது. ஜவாத் என்ற பயனர் அந்த பிஸ்கட்டை தனது மகனுக்கு வாங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

“நீண்ட நாட்களாக தேடிய பிறகு, என் மகனுக்குப் பிடித்த பிஸ்கட்டை இன்று வாங்க முடிந்தது. விலை வெகுவாக அதிகமாக இருந்தாலும், மகனின் முகத்தில் மகிழ்ச்சியை காண மறுக்க முடியவில்லை,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவலால் உணர்ச்சிவசப்படைந்த உலகமக்கள், பார்லே நிறுவனம் மற்றும் உலகளாவிய நிவாரண அமைப்புகளை டேக் செய்து, காசா மக்களுக்கு நேரடி உதவிகளை வழங்க கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பால் நிவாரண லாரிகள் கைப்பற்றப்படுவதாகவும், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகள் கருப்புச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஜவாத் தனது பதிலில், “உதவிகளை மக்கள் பார்க்கிறதில்லை. சிலரால் அவை திருடப்பட்டு கருப்புச் சந்தையில் பைத்தியக்கார விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன,” என வேதனையுடன் கூறியுள்ளார்.

உதாரணமாக :

ஒரு கிலோ சர்க்கரை – ரூ.7,500

ஒரு பை மாவு – சுமார் ரூ.41,000

அதிக விலைக்கு உணவுகளை வாங்க இயலாத மக்கள், சாப்பாட்டிற்காக உயிரையே பணயம் வைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஐ.நா. அச்சுறுத்தல் :
கடந்த வியாழக்கிழமை வெளியான ஐ.நா. அறிக்கையில், காசாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கடந்த பிப்ரவரியிலிருந்து மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மே மாத இறுதியில் பரிசோதிக்கப்பட்ட 50,000 குழந்தைகளில் 5.8% பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, காசாவின் வடக்கு பகுதியில் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 16% பேர் ஊட்டச்சத்து குறைவால் துன்பப்படுகின்றனர். மருத்துவமனைகளில், குறைந்த எடை மற்றும் பசிப்பிணியில் சிக்கிய குழந்தைகள் எண்ணிக்கை நாளே நாளாக அதிகரிக்கிறது.

Exit mobile version