விழுப்புரம் கோவிலில் பூசாரி மீது தாக்குதல் – கோவிலை திறக்கக் கோரி பொதுமக்கள் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா.
விழுப்புரம்:
விழுப்புரம் பழைய மீன் மார்க்கெட் பாகர்ஷா வீதியில் அமைந்துள்ள ரேணுகாம்பாள் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நேற்று இரவு குடிபோதையில் இருந்த நபர் ஒருவர், கோவில் பூசாரி கண்ணனை அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பூசாரி கண்ணன், கோவிலை பூட்டிவிட்டு திறக்காமல் இருந்துள்ளார். இதனால் இன்று காலை கோவில் திறக்கப்படாததை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்திய பொதுமக்கள், கோவில் தொடர்ந்து திறக்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக விழுப்புரம் புதுச்சேரி சாலையில், பழைய பேருந்து நிலையம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இதற்கிடையே, தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூசாரி கண்ணன், தன்னை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனக் கோரி விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மேற்கு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.















