கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால், மக்கள் உப்பு கலந்த தண்ணீரையே குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த ஊரில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கிடைக்கும் போர்வெல் தண்ணீர் அதிக உப்புத்தன்மை கொண்டதால், குடிநீராக நேரடியாக பயன்படுத்த முடியாது. இந்த பிரச்னையை தீர்க்க, ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.10 லட்சம் செலவில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நல்லகுளம் கரையில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் நிறுவப்பட்டது. அந்த இயந்திரத்தின் மூலம் குடம் ஒன்றுக்கு ரூ.5 கட்டணத்தில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை மக்கள் பெற்றுக்கொண்டு வந்தனர்.
ஆனால் தற்போது இயந்திரம் பழுதடைந்துவிட்டதால், கடந்த ஒரு மாதமாக மக்கள் உப்புத்தன்மையுள்ள நீரை நேரடியாக குடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. சிலர் தனிப்பட்ட முறையில் ஒரு குடம் தண்ணீரை ரூ.15க்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் அதற்கும் வழியின்றி உப்பு நீரையே நம்பி வாழ்ந்துவருகின்றனர். இதனால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் கோடைக்காலத்தின் காரணமாக குடிநீர் தேவையும் அதிகரித்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ள நிலையில், கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து, பழுதடைந்த சுத்திகரிப்பு இயந்திரத்தை சரிசெய்து, மக்கள் குடிநீர் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பி.டி.ஓ சங்கர் கைலாசம் கூறியதாவது, ”இப்போது உப்புத் தன்மை அதிகரித்துள்ளதால், கடந்த 5 நாட்களாக தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை. இயந்திரத்தை விரைவில் பழுதுபார்த்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.