கன்னியாகுமரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நோக்கத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று தூத்துக்குடி விமான நிலையம் வழியாக வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாகிஸ்தான் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது வலுவான கருத்துகளை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது :
“இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனை புதியதல்ல. பாகிஸ்தான் செய்யும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு அறத்தின் அடிப்படையில் நாம் பதிலடி கொடுக்கின்றோம். இந்தியாவில் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு, நாம் நிரந்தர பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில் நாம் கோழைகளாகிவிடுவோம்.”
மேலும் தொடர்ந்த அவர், “பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்து வருகின்றது. ட்ரோன் தாக்குதல்களுக்கு இந்தியா சகிக்காமல் பதிலடி கொடுத்துள்ளது. பொருளாதார ரீதியாகவும் இந்தியா பாகிஸ்தானை விட பலமுள்ள நாடு. இந்தியாவின் பொருளாதார அளவு 12 என்றால், பாகிஸ்தான் 1 மட்டுமே. பாகிஸ்தானுடன் சண்டையிட்டாலும் நமக்கு நட்டமில்லை.”
முன்னேறிய பாணியில் பிரதமர் மோடி தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் செயல்படுவதாகவும், “தீவிரவாதிகள் பூமியின் கீழ் ஒளிந்தாலும், தேடிப் பிடித்து அழிப்போம்” என்ற பிரதமர் மோடியின் உறுதிமொழியை கூறியதுடன், “பாகிஸ்தானில் அரசைக் கட்டுப்படுத்துவது அந்நாட்டு இராணுவமே. அதனால் பாகிஸ்தான் என்ற நாடே முழுமையாக செயல்பட முடியாத நிலைமை. எதிர்காலத்தில் பாகிஸ்தான் என்ற நாடு வரைபடத்தில் இருக்காது என்பதே உண்மை நிலை” என தெரிவித்துள்ளார்.
முடிவில், பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றாக இருக்கின்றன. இது வரவேற்கத்தக்கது. திமுக அரசு முழுமையாக மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.