பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையில் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல். இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் எல்லை பகுதியில் கடும் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர், டெல்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்முவில் சைரன் ஒலிகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமாபாத் நகரம் தற்போது இந்திய தாக்குதலின் வளையத்திற்குள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, ஜம்மு & காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அவசர ஆலோசனைகள் நடத்தியுள்ளனர். அரசு அலுவலர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “இந்தியா-பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையிடப்போவதில்லை. இது நம்மிடம் கட்டுப்பாடும் சம்பந்தமும் இல்லாத பிரச்சனை. இந்தியாவையும், பாகிஸ்தானையும் ஆயுதங்களை கீழே வைக்க சொல்ல முடியாது. பிரச்சனை ராஜதந்திர வழியில் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களது நிலை. இது அணு ஆயுத போராக மாறும் அபாயம் இல்லை என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறோம்,” எனக் கூறினார்.
இதற்கு முன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், “இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் நன்கு அறிவேன். பிரச்சனை முடிவுக்கு வர வேண்டியது அவசியம். எனால் உதவ முடியுமெனில் தயாராக இருக்கிறேன்,” என்று கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.