டெல்லி: இந்தியா–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் விமானங்களால் இந்திய எல்லை மீதான தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உறுதியான பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் எஃப்-16, ஜேஎஃப்-17 போர் விமானங்கள் மூன்றை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சல்மார் எல்லை பகுதியில் வீழ்ந்துள்ளது. அதிலிருந்து வெளியே வந்த பாகிஸ்தான் விமானி உயிருடன் பிடிபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் 532 கிமீ எல்லை பகிர்ந்துள்ள பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.
அதேபோல், ஹரியானா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் போலீஸ் மற்றும் சுகாதாரத் துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைவரும் அவசரக் கடமைகளுக்குத் தயாராக இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் இரண்டு நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பயணிகள் குறைந்தபட்சம் 3 மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்தை அடைய வேண்டும் என்றும், அரசு அங்கீகரித்த அடையாள அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.