சென்னை உயர்நீதிமன்றம், இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதி இன்றி சமூக வலைதளங்களில் பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து முக்கியமான உத்தரவை இன்று பிற்பகல் வெளியிட்டது.
யூட்யூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் தனது புகைப்படம், பெயர், “இசைஞானி” பட்டப் பெயர், குரல் ஆகியவை அனுமதி இன்றி பயன்படுத்தப்படுவதாகக் குற்றம்சாட்டி, இளையராஜா புதிய மனு தாக்கல் செய்திருந்தார். சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ள புகைப்படங்களையும் அகற்ற வேண்டும் எனவும், தனது உருவம் அல்லது குரல் பயன்படுத்தி வருவாய் ஈட்டியவர்களின் வருவாய் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி என். செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பிரபாகரன் மற்றும் சரவணன், பல யூட்யூப் சேனல்கள் மற்றும் இசை நிறுவனங்கள் அவரது புகைப்படத்தை மார்ஃபிங் செய்து, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றம் செய்து வருவாய் ஈட்டுவதாக வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து, “பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்துவதால் அவருக்கு என்ன பாதிப்பு?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், இளையராஜாவின் தனிப்பட்ட உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், அவரது உருவத்தை வணிக ரீதியாக பயன்படுத்தி பலர் நிதி பலன் பெறுகின்றனர் என்றும் கூறினார். சில தளங்களில் அவதூறான உள்ளடக்கங்களும் வெளியிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
வாதங்களை பரிசீலித்த நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படம், பெயர் உள்ளிட்டவற்றை அனுமதி இன்றி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும், சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனல்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பதில் அளிக்க அறிவுறுத்தி, வழக்கின் தொடர்ந்த விசாரணையை தள்ளிவைத்தார்.
















